சென்னை: ஊத்துக்கோட்டை அருகே பருத்திமேனி குப்பம் கிராமத்தில் விவசாய நிலத்தில் 6 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் கோரிக்கையை ஏற்பவர்களுக்கே வாக்கு எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ தூரத்திற்கு ₹3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதியில் தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக நில அளவீடு பணிகளும் நடந்தது. இதற்கு ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள 22 கிராம விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி தாலுகா அலுவலகத்திலும் பலமுறை போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால், இதையெல்லாம் மீறி தொடர்ந்து விவசாய நிலத்தில் சாலை அமைக்க நில அளவீடு செய்யும் பணிகள் நடந்து முடிவடைந்தது. இந்நிலையில், நேற்று ஊத்துக்கோட்டை அருகே பருத்திமேனி குப்பம் கிராமத்தில் 6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘விவசாய நிலத்தை அழித்து 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘8 வழிச்சாலையை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், எங்கள் ஊரான பருத்திமேனிகுப்பம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் 6 வழிச்சாலையை ரத்து செய்வதாக உறுதியளித்தால் அவர்களுக்கு எங்கள் வாக்குகளை செலுத்துவோம்’’ என்றனர்….