சின்னாளபட்டி : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரத்தில் பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விதையுடன் உள்ள பருத்தி கிலோ ரூ.100க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், கோனூர், நவாபட்டி, கரிசல்பட்டி, கசவனம்பட்டி, இராமநாதபுரம், ஆலத்தூரான்பட்டி மற்றும் தருமத்துப்பட்டி, கட்டசின்னாம்பட்டி காமாட்சிபுரம், சில்வார்பட்டி, கதிரயன்குளம் பகுதிகளில் கரிசல்பூமி அதிகமாக உள்ளது. இதனால் பருவமழை பெய்ததற்கு பின்பு அப்பகுதி விவசாயிகள் பருத்தி பயிரிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த ஆவணி மாதம் ஹைபிரீட் ரக பருத்தி விதைகளை வாங்கி இப்பகுதி விவசாயிகள் நடவு செய்திருந்தனர். தற்போது பருத்தி செடி நன்கு விளைந்து காய்வெடித்து வெள்ளைநிற பருத்திகள் வெளியே தெரிவதால் விவசாயிகள், தொழிலாளர்கள் மூலம் பருத்திகளை பறித்து வருகின்றனர். சராசரியாக தொழிலாளி ஒருவர் 20 கிலோ பருத்திகளை செடியிலிருந்து பறித்து எடுக்கின்றனர். அவர்களுக்கு கூலியாக ரூ.300 வழங்கப்படுகிறது.இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்தாண்டு பருத்தி விலை குறைவாக இருந்தது. தற்போது நூல் விலை ஏற்றத்தால் பருத்தி விலையும் ஏற்றமடைந்துள்ளது. விதையுடன் கூடிய 1 கிலோ பருத்தி மார்க்கெட்டில் ரூ.100க்கு விற்கப்படுகிறது. இன்னும் விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்கிறோம்,’ என்றனர்….