ஊட்டி, ஏப். 12: குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. சங்க துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். லட்சுமி நாராயணன் வரவேற்றார். செயலர் ஆல்துரை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்புக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குறைத்து வருவது வேடிக்கையாக உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பயண அட்டைகளின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பயணிகளை மிகுந்த இன்னலுலுக்கு ஆளாக்கி வருகிறது.
இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமீப காலத்தில் பல ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது.நீலகிரியில் முழுவதும் அரசு பஸ்களே இயங்குவதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் ஆவின் பால் பொருட்கள், ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நீலகிரியில் மட்டும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது இம்மாவட்ட மக்களை சுரண்டும் செயல். எனவே இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என முடிவு செய்யப்பட்டது. தர்மசீலன் நன்றி கூறினார்.