சின்னசேலம்: சின்னசேலம் அருகே நைனார்பாளையம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(36), விவசாயி. இவரது தந்தை பெயரில் இருந்த நிலத்தை இவரும், இவரது சகோதரர்கள் 3பேரும் கடந்த ஆக்ஸ்டு மாதம் பாகப்பிரிவினை பத்திரம் எழுதிக் கொண்டனர். இதையடுத்து பட்டா மாற்றம் செய்ய ஜெயராமன் மற்றும் அவரது சகோதரர்கள் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இணையவழியில் விண்ணப்பித்தனர். ஆனால் நிலத்தை அளக்க யாரும் வராததால் ஜெயராமன் கடந்த 15ம் தேதி அலுவலகத்துக்கு சென்று விபரம் கேட்டுள்ளார். அப்போது, சர்வேயர் சூரியா 3 பேரும் தலா ரூ.8,000வீதம் ரூ.24,000 லஞ்சம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து ஜெயராமன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்துள்ளார். போலீசார் அளித்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை நேற்று மாலை நைனார்பாளையம் அருகே சூர்யா மற்றும் கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை சந்தித்து ஜெயராமன் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். …