திருவாடானை, ஏப்.4: சேதமடைந்த படித்துறையை இடித்து அகற்றி விட்டு புதிய படித்துறை கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே கீழ்க்குடி பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவில் அருகில் இருக்கும் ஊரணியை அப்பகுதி பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரணியில் படித்துறை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு இப்பகுதியில் பெய்யாதபோதும், கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பெய்த கனமழையால் வரத்துக் கால்வாய் மூலம் மழைநீர் ஊரணியில் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் கீழ்க்குடி, பூசாரியேந்தல் வேளார் குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி இந்த ஊரணியில் உள்ள படித்துறையை பயன்படுத்தி குளிப்பதற்காகவும், அழுக்கு துணிகளை துவைப்பதற்காகவும் வந்து செல்கின்றனர். இந்த சூழலில் தற்சமயம் ஊரணியில் உள்ள படித்துறை படிகள் முழுவதும் சேதமடைந்து இரண்டு பக்கவாட்டிலும் உள்ள தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு பாதிக்குமேல் இடிந்து விழுந்து விட்டது.இதனால் இங்கு குளிக்க வரும் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். ஆகையால் தற்சமயம் ஊரணியில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் சேதமடைந்து பாதிக்கு மேல் இடிந்து விழுந்து அபாய நிலையில் உள்ள இந்த படித்துறையை இடித்து அகற்றி விட்டு புதிய படித்துறை கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறுகையில்: கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் பெய்த கனமழையால் இந்த ஊரணியில் மழைநீர் தேங்கி நிரம்பியது. இதில் கீழ்க்குடி, பூசாரியேந்தல், வேளார் குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் துணிகளை துவைத்தும்,குளித்து விட்டும் சென்றனர்.ஆனால் தற்சமயம் இந்த ஊரணியில் கட்டப்பட்ட படித்துறை முழுவதும் சேதமடைந்து பாதிக்குமேல் இடிந்து விழுந்து விட்டது. ஊரணியில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால், சேதமடைந்த படித்துறையை இடித்து விட்டு புதிய படித்துறை கட்டித்தர வேண்டுமெனக் கூறினார்.