ஊட்டி: ஊட்டி படகு இல்லம் சாலையில் பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை தொட்டி மூடியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக படகு இல்லம்,ரோஜா பூங்கா,தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் படகு இல்லம் செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியின் மூடி சேதமடைந்து உடைந்து போய் உள்ளது.
வாகனங்கள் ஏதுவும் சிக்கி விடாமல் இருக்க இங்கு மர கிளைகள் வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இச்சாலை வழியாக காந்தல் பகுதிக்கு நாள்தோறும் செல்லக்கூடிய அரசு பஸ்கள், கர்நாடக, கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சாலையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பாதாள சாக்கடை தொட்டியின் மூடியை சரி செய்வதுடன், சாலையையும் செப்பனிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.