Sunday, September 29, 2024
Home » பஞ். மாஜி தலைவர் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் மீது வழக்குப்பதிவு

பஞ். மாஜி தலைவர் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் மீது வழக்குப்பதிவு

by Karthik Yash

தவளக்குப்பம், செப். 5: புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் ராஜா (64). முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரான இவருக்கு ஆண்டியார்பாளையம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிள்ளையார்திட்டு பகுதியில் பிரபல தனியார் ரியல் ஏஜென்சியின் வீட்டு மனைப் பிரிவில் முன்னாள் எம்எல்ஏ ஆனந்தராமன் தனது மனைவி பெயரில் 7 மனைப்பிரிவு என சுமார் 7,685 சதுரஅடி கொண்ட மனைப்பகுதியை வாங்கினார். பக்கத்தில் உள்ள ஆற்று புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி கட்டுவது தெரியவந்துள்ளது. இதற்கு ராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட ஆட்சியர், நிலஅளவை மற்றும் பதிவாளர் துறை இயக்குனர், பொதுப்பணித்துறை நீர் பாசன செயற்பொறியாளர் மற்றும் தொகுதி எம்எல்ஏவும், சபாநாயகருமான செல்வம் ஆகியோருக்கு கடந்த மாத இறுதியில் கடிதம் மூலம் புகார் மனு அளித்தார். இதன் எதிரொலியாக சில அதிகாரிகள் சம்பவ பகுதியில் விசாரணையை மேற்கொண்டனர். இதனிடையே கடந்த 28ந்தேதி முன்னாள் எம்எல்ஏ ஆனந்தராமன் மற்றும் அவரது ஆதரவாளரான தவளக்குப்பம் மெயின் ரோட்டில் வசிக்கும் சேகர் உள்ளிட்ட சிலர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா வீட்டின் எதிரே நின்று கொண்டு அவரது வீட்டை செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்களாம். மேலும் அவரையும், குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராஜா தரப்பில், தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தெற்கு எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மேற்பார்வையில் எஸ்ஐ சண்முக சத்யா தலைமையிலான போலீசார் தகாத வார்த்தையால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆற்று புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக அங்கு நேரடி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இச்சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi