நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எல்.கே.ஜி பயிலும் 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சிவந்திபட்டிக்கு அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட சிறுவர், சிறுமிகள் இன்று பாளையங்கோட்டை கேட்டிஸ் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். வசவப்புரம் – செய்துங்கநல்லூர் சாலையில் அனவரதநல்லூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆட்டோவுக்கு அடியில் சிக்கியிருந்த எல்.கே.ஜி பயிலும் சிறுவன் நவீன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மாணவர்கள் அப்பகுதி மக்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் ஊத்துப்பாறை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற பெற்றோர் கதறி அழுத காட்சிகள் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தன. ஆட்டோ ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டியதால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது….