*அடிப்படை வசதிகள் தயார் நெல்லை : கொரோனா பரவல் அதிகரித்தால் அதை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒத்திகையில் முன்எச்சரிக்கை ஏற்பாடு மற்றும் வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.சீனாவில் தற்போது ஒமிக்ரான் பி.எப். 7 என்ற புதிய வகை கொரோனா தோன்றி அங்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவ விடாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி நேற்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு வசதிகள் குறித்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான தனி சிறப்பு வார்டு மற்றும் அங்குள்ள வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு, மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பிற மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராஜேந்திரன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், கொரோனா சிகிச்சை பிரிவு பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அழகேசன் உள்ளிட்டோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு மற்றும் அதற்கு தேவையான வசதிகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பான முழு அறிக்கையை சுகாதாரத்துறை சார்பில் மாநில சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.இதுகுறித்து டீன் டாக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே 2 ஆண்டுகளாக இந்த நோய்க்கு சிகிச்சையளித்த அனைத்து அனுபவங்களும் உள்ளன. காற்றிலிருந்து ஆக்சிஜன் 675 லிட்டர், 975 லிட்டர் மற்றும் ஒரு டன் லிட்டர் என உற்பத்தி செய்யும் பிளான்ட்கள் உள்ளன. இவை தற்ேபாது நன்றாக இயங்கும் நிலையில் உள்ளன. மேலும் 500 ஆக்சிஜன் கான்சென்டிரடேட் கருவிகளும் இருக்கின்றன. கொரோனாவுக்கு என ஒதுக்கப்பட்ட தனி வார்டில் 200 முதல் 300 பேர் வரை சிகிச்சை பெற படுக்கை மற்றும் நேரடியாக குழாய் மூலம் ஆக்சிஜன் பெறும் வசதிகள் உள்ளன.தேவைப்பட்டால் கூடுதல் சிறப்பு வார்டுகள் திறக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்தில் அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்….