திருப்பூர்: நூல் விலை உயர்வு எதிரொலி காரணமாக பின்னலாடை விலையை 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளதாவது: பின்னலாடை தொழில் கடந்த 2 கொரோனா அலைகளிலும் மிகவும் பாதிப்படைந்தது. இந்த நிலையில் நின்றுபோன ஆர்டர்களும், வெளியிடங்களுக்கு சென்ற தொழிலாளர்களும் திரும்ப வந்து கொண்டிருக்கும் சமயம் இது. ஆனால் எதிர்பாராதவிதமாக நூல் விலை கிலோவிற்கு ரூ.50 வரை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. பின்னலாடை தொழிலுக்கும், அதனை சார்ந்து இயங்குகின்ற தொழில்களுக்கும் தேவையான மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக உபதொழில் துறையினர் அனைவரும் கூலி கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர்.பின்னலாடை தொழிலாளர்களுக்கு சம்பள விகிதமும் சமீபத்தில் உயர்த்தி ஒப்பந்தம் போடப்பட்டது. இவை எதுவும் எங்களது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என உணர்வதால், பின்னலாடை விலையை உயர்த்துவது தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை. கடந்த 12ம் தேதி கூடிய சங்க செயற்குழு கூட்டத்தில் பின்னலாடைகளுக்கான விலையை நாளை (15ம் தேதி) முதல் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என முடிவு செய்யப்பட்டது. உறுப்பினர்கள் தங்களுடைய நிறுவனத்தில் தயாரிப்பு செலவுகள், தயாரிப்பின் தரம் மற்றும் தங்களுடைய வியாபார எல்லை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய விலை உயர்வை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நிர்ணயிக்கும் நியாயமான விலை உயர்வு, பின்னலாடை வியாபாரிகளுக்கும், பின்னலாடை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….
நூல் விலை உயர்வு எதிரொலி பின்னலாடை விலை 20 சதவீதம் வரை உயர்கிறது
previous post