ஊட்டி, ஜன.19:வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி வனப்பரப்பு அதிகம் உள்ள மாவட்டம் ஆகும். இந்த வனங்களில் சிறுத்தை, செந்நாய், புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.இங்குள்ள பெரும்பாலான கிராம பகுதிகள் வனப்பகுதியை ஓட்டியே அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் கோழிக்கடைகள் வைத்துள்ளவர்கள் மீதமான கோழி இறைச்சிக் கழிவுகளை குழி தோண்டி புதைக்காமல், வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி வாசத்தால் கவரப்படும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் கிராமத்தை ஓட்டிய பகுதிக்கு வருகின்றன. இவற்றை சாப்பிட்டு பழகிய அவை அடிக்கடி அங்கு வருகின்றன.சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து கோழி, ஆடு போன்றவற்றை கடித்து கொன்று விடுகின்றன.இதுபோன்ற கழிவுகளை சாப்பிட பன்றிகளும் படையெடுக்கின்றன.
இதனால் கோழி இறைச்சி கழிவுகளை வனப்பகுதிகளில் வீச வேண்டாம் எனவும், அவ்வாறு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை எச்சாித்துள்ளது. இருப்பினும் கிராம பகுதிகளில் இதுபோன்ற செயல்கள் நடந்து வருகின்றன.எனவே அவ்வாறு கோழி கழிவுகளை வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.