சென்னை: நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு பதில் தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி, தமிழக பாஜ பொது செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் மருத்துவ மற்றும் குடும்பநல துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழுவை நியமித்ததன் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்த மனுதாரர் இந்த விவகாரத்தில் பொது நலன் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84,343 மனுக்கள் வந்துள்ளன. நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மனுதாரர் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை. அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர், விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்த அரசால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, பொது பள்ளி நடைமுறைக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவை நியமிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவு கட்டுப்படுத்தவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய அரசு பதில் தர உத்தரவிட்டு விரிவான விசாரணைக்காக வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….