நீடாமங்கலம், ஆக. 10: நீடாமங்கலம் அண்ணாசாலையில் இருந்து பெரியார் சிலை வரை சாலை ஓரம் பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நீடாமங்கலம் கடைவீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணா சாலையிலிருந்து பெரியார் சிலை வரை தார் சாலை சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட சாலையில் இருபுறங்களும் சில இடங்களில் மேடும் பள்ளமாக உள்ளது. இந்த இடங்களில் இரு சக்கர வாகனங்கள் இறக்கி ஏற்றுவதில் வாகன ஓட்டிகள் சிரமம் ஏற்படுகின்றனர். சில இடங்களில் இரு சக்கரத்தில் வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுகின்றனர். மேடும், பள்ளமாக சாலையின் இரு புறங்களும் இருப்பதால் பொது மக்கள் மாணவர்கள் நடந்து செல்லும் போது கால் இடறி கீழே விழுந்தும் செல்லும் நிலை உள்ளது. இந்த சாலை மிகவும் முக்கியமான சாலை ஆகும்.
இந்த சாலையில் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் செல்கிறது. அதேபோன்று வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ,மதுரை, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ் மற்றும் வாகனங்கள் செல்கிறது. இங்கு இந்த முக்கிய சாலையில் மேடும் பள்ளமாக இருக்கும் இடத்தில் வாகனங்கள் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே கடை வீதி சாலையில் அண்ணா சாலையிலிருந்து பெரியார் சாலை வரை சாலையில் இருபுறங்களிலும் பேவர் பிளாக் அமைத்து சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.