சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். வடிவேலு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2007ல் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து ஏற்பாட்டின்படி தாம்பரம் அருகே பெருங்களத்துாரில் 3.52 ஏக்கர் நிலத்தை வடிவேலு வாங்கியுள்ளார். இந்நிலையில், அந்த நிலத்தின் அருகே குடிநீர் வடிகால் வாரியம் வரவுள்ளதாகவும் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் வடிவேலுவிடம் சிங்கமுத்து தெரிவித்துள்ளார். அந்த நிலத்தை வேறு நபருக்கு விற்கவும் ஆலோசனை கூறியுள்ளார். இந்த நிலத்தை விற்பனை செய்ய சிங்கமுத்து அறிவுறுத்தலின்படி தாம்பரத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு வடிவேலு பொது அதிகார பத்திரம் வழங்கியுள்ளார். அப்போது, நிலத்தை தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக சேகரும், சிங்கமுத்துவும் அந்த பணத்தை வடிவேலுவிடம் கொடுத்துள்ளனர். இதற்கிடையே 2010ல் நடிகர் வடிவேலு வீட்டில், வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பெருங்களத்துாரில் வாங்கிய நிலம் 1.93 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கு ஏன் வரி செலுத்தவில்லை என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வடிவேலு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் சிங்கமுத்து மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்கமுத்து, சேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜ் முன்பு விசாரணையில் உள்ளது. வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கில் தற்போது குறுக்கு விசாரணை தொடங்கியுள்ளது. குறுக்கு விசாரணை செப்டம்பர் 29ம் தேதி நடைபெறும் என்று பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு நீதிபதி நாகராஜ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிங்கமுத்து மற்றும் சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், வரி ஏய்ப்பு செய்ததை மறைப்பதற்காக வடிவேலு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் என்று வாதிட்டனர். வடிவேலு படப்பிடிப்பில் இருப்பதால் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, டிசம்பர் 7ம் தேதி வடிவேலு குறுக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். …
நில மோசடி வழக்கில் குறுக்கு விசாரணை நடிகர் வடிவேலு டிச.7ல் ஆஜராக வேண்டும்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
previous post