மாமல்லபுரம், ஜூலை 29: மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள், பசுமை வீடுகள், புதிய கட்டிட அனுமதி உள்ளிட்ட பொதுமக்களுக்கான அனைத்து பணிகளும் இந்த அலுவலகத்தின் மூலமே நடக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் இருந்தாலும், அரசு அதிகாரியான செயல் அலுவலர் இல்லாமல் எந்த கோப்புகளும் நகர்த்த முடியாது.
இத்தகைய, பொறுப்பான பதவிக்கு கடந்த 2 மாதங்களாக நிரந்தர செயல் அலுவலர் இல்லை. தற்காலிகமாக வேறொரு பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இவரால், அன்றாடம் செயல்படும் அடிப்படை பணிகளை மட்டுமே செயல்படுத்த இயலும். பெரிய அளவிலான திட்ட பணிகளுக்கு உரிய முடிவு எடுக்க முடியாது. எனவே, மாமல்லபுரம் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.