மோகனூர் : நாமக்கல் அருகே சருகு மலையில் 150அடி உயரத்தில் அனுமதியின்றி இளைஞர்கள் பாராகிளைடிங் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல்லை அடுத்துள்ள வள்ளிபுரம் சருகுமலையில், இளைஞர்கள் சிலர் நேற்று, சுமார் 150அடி உயரத்தில் இருந்து கீழே பறந்து செல்லும் பாராகிளைடிங் சோதனை மேற்கொண்டனர்.இதற்கு போலீசார் மற்றும் வனத்துறையினரிடம், அவர்கள் அனுமதி எதுவும் பெறவில்லை. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல், பாராகிளைடிங் சாகசம் செய்தது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சாகசத்தில் ஈடுபட்டது, கோவையை சேர்ந்த கோகுல் என்பதும், இதை நாமக்கல்லை சேர்ந்த செழியன் என்ற வாலிபர் ஒருங்கிணைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி கூறுகையில், ‘பாராகிளைடிங் செய்வதற்கு யாரும் அனுமதி பெறவில்லை. இது போன்ற சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்,’ என்றார்….