டெல்லி : கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது நாட்டுக்கே பேரழிவு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவனைகள் ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகள் ரூ. 600க்கும் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது நாட்டிற்கே பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார். மோடியின் நண்பர்களுக்கான வாய்ப்பு என்றும் மத்திய அரசு விளைத்துள்ள அநீதி என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதே போல் கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து இருப்பதன் மூலம் மாநில அரசுகளை மத்திய அரசு சிக்கலில் மாட்டிவிட்டு தப்பித்து கொண்டாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 5 நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் 2 தவணை தடுப்பூசியை ஒரு நடுத்தர குடும்பத்தால் காசு கொடுத்து போட்டுக் கொள்ள முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். இது தான் மலிவு விலை தடுப்பூசியா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். …