பெரம்பூர்:புளியந்தோப்பில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு ரவுடிக்கு 172 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் குழந்தை ஆச்சாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (எ) மண்ணு (23). இவர், மீது புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், வேப்பேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த மார்ச் மாதம் 14ம்தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து, இனி எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்தார். அதன்பின்பு கடந்த அக்டோபர் மாதம் 31ம்தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்டு, புளியந்தோப்பு போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ராம்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று இந்த வழக்கை விசாரித்த துணை கமிஷனர் ராம்குமார் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதால், அவரை 172 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால், தற்போது சிறையில் உள்ள ராம்குமார் அடுத்த 172 நாட்களுக்கு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது….