குயின்ஸ்டவுன்: நியூசிக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க வெற்றி அவசியம் என்ற நிலையில் இந்திய மகளிர் அணி இன்று 3வது ஒருநாள் ஆட்டத்தில் களம் காண உள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் 62ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 3விக்கெட் வித்தியாசத்திலும் போராடி தோற்றது. இந்திய அணியில் மிதாலி , யாஸ்டிகா, ரிச்சா கோஷ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் அனுபவ வீராங்கனையான ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து நடுவரிசையில் சொதப்புவதால் இந்தியாவுக்கு தோல்வி தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஆட்டத்தில் அமிலியா கெர் சதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். உள்ளூரில் ஆடும் உற்சாகத்தில் ஷோபி டிவைன் தலைமையிலான நியூசி வீராங்கனைகள் தொடர்ந்து அசத்தி வருவது இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது. அதை சமாளித்தால் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிட்டும். இல்லாவிட்டால் நியூசில 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெறுவதுடன் தொடரையும் கைப்பற்றும்.* ஹர்மனுக்கு ஓய்வா?ஒருநாள் ஆட்டங்களில் ஹர்மன் பிரீத் கவுர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 5ஆட்டங்களில் 10, 12, 1, 16, 19 ரன் எடுத்தார். அதற்காக எடுத்துக் கொண்ட பந்துகள் அதிகம். மந்தனா அணிக்கு திரும்புவதால், ஹர்மனுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது….