சிவகங்கை, செப்.16: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பருவமழையினை எதிர் நோக்கி அனைத்து வட்டாரங்களிலும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகளுக்கு வழங்குவதற்கு யூரியா 2282மெ.டன், டிஏபி 1568மெ.டன் பொட்டாஸ் 578மெ.டன், காம்ளக்ஸ் 2029 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தேவையான நுண்ணூட்ட உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு உள்ளது. நெல் நுண்ணூட்ட உரம் 67.73மெ.டன், சிறுதானியங்கள் நுண்ணூட்ட உரம் 9.73மெ.டன், பயறு நுண்ணூட்ட உரம் 4.143மெ.டன், தென்னை நுண்ணூட்ட உரம் 27.90மெ.டன், நிலக்கடலை நுண்ணூட்ட உரம் 4.63மெ.டன் என மொத்தம் 114.13மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
திரவ உயிர் உரங்கள் 18,356 லிட்டர் இருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை பயிர் சாகுபடி பரப்பிற்கு ஏற்றவாறு உடனடியாக வழங்கிட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான உரங்களை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.