சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் குமரேசன், பொதுச்செயலாளர் முருகையன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து 6 மாதங்களுக்கு மேலாக தேர்தல் நடத்தியதற்கான செலவினங்கள், மதிப்பூதியம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புப் பணியிடங்கள் வழங்கப்படாதது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து தேர்தல் மதிப்பூதியம் வழங்கி அரசாணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்கள் ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சம் வழங்கி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை உடன் நிறைவேற்றி ஆணையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து வருவாய் அலுவலர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வெள்ள நிவாரணம் வழங்குதல், மக்கள் குறை களைதல், பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளில் வருவாயத்துறை அலுவலர்கள் முனைப்போடு ஈடுபடுவார்கள்….