தேனி, நவ. 5: தேனி அருகே பூதிப்புரத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக கலை, இலக்கிய பேரவை சார்பில் கலைஞர் தலைமையிலான அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக கலை, இலக்கிய பேரவை சார்பில், கலைஞர் தலைமையிலான அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து படக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தேனி வடக்கு மாவட்ட திமுக கலை, இலக்கிய பேரவை சார்பில் தேனி வடக்கு மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மற்றும் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி பகுதிகளில் கலைஞர் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து படக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதன்படி, தேனி வடக்கு மாவட்ட திமுக கலை, இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் வக்கீல் செல்வக்குமார் தலைமையில் தேனி அருகே வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சிகளிலும், தேனி அருகே படக்காட்சிகள் ஒளிரப்பப்பட்டன.
தேனி அருகே வீரபாண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் கீதாசசி, பேரூர் செயலாளர் செல்வராஜ், பழனிசெட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டனர். தேனி அருகே பூதிப்புரத்தில் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன், பூதிப்புரம் பேரூராட்சி சேர்மன் கவியரசு, முன்னாள் பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன், பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.