சென்னை: தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக கடந்த வாரம் சென்னையில் உள்ள 700க்கும் மேற்பட்ட தெருக்கள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து 820க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். அதன்படி சென்னையில் பல்வேறு தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை முழுவதும் அகற்றி, சாலையை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 16 சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மின் மோட்டார்கள் மூலம் தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் ஒரு சில சுரங்கப் பாதைகள் தவிர மற்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மேற்கண்ட சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த சுரங்கப் பாதைகளில் தேங்கியிருந்த தண்ணீரை அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்பு மற்றும் ராட்சத மோட்டார்களை வைத்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்துள்ளதால் சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி வியாசர்பாடி கணேசபுரம், கோடம்பாக்கம், துரைசாமி சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை உள்ளிட்ட 16 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். …
தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து 16 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து அனுமதி: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
previous post