சென்னை: தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் சென்னை திரும்பி வருவதால் பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 6 மணிக்குள் பரனூர் சுங்கச்சாவடியை கடந்த மக்கள் சிரமமின்றி சென்னை வந்து சேர்ந்தனர். நேரம் செல்ல செல்ல பள்ளி, கல்லூரிகள், பணிகளுக்கு செல்பவர்களும் தங்கள் வீடுகளில் இருந்து புறப்பட்டதால் சிங்கப்பெருமாள் கோவில், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் உரிய நேரத்தில் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். …