திருவாரூர், செப்.20: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிவா (42) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளியில் மாணவர்கள் இறைவணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பள்ளியில் நடைபெறும் கலையரங்க கட்டிட பணிக்காக திருநாட்டியதாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (28). சித்திரையூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (38) ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் எம்.சாண்ட் எடுத்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவர்கள் காலை இறை வணக்கம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் முடிந்த பின்னர் டிராக்டரை உள்ளே அனுமதிப்பதாக ஆசிரியர் சிவா தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக எம். சாண்ட் எடுத்து வந்த இருவரும் தற்காலிக ஆசிரியர் சிவாவை சென்ட்ரிங் ரிப்பரால் தாக்கிகொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலையில் காயம் அடைந்த ஆசிரியர் சிவா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் வடபதிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசன் மற்றும் முருகேசன் இருவரையும் கைது செய்தனர்.