திருமங்கலம், ஜூலை 9: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி (எ) கார்த்திக். சென்னையில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுவேதா (19). திருமணமாகி ஓராண்டு ஆகிறது. சுவேதா ஆலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார். இதன் காரணமாக சாத்தங்குடியில் கணவர் வீட்டில் இருந்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மதியம் சுவேதா மாமியார் வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டி இருக்கவே இதே பகுதியில் குடியிருக்கும் சுவேதாவின் தந்தை கருப்பசாமிக்கு போனில் அவர் தகவல் கூறியுள்ளார்.
உடனடியாக கருப்பசாமி வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது சுவேதா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருமங்கலம் ஆர்டிஓ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.