திருமங்கலம், ஜன. 30: திருமங்கலத்தில் நகர் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோஸ் அரிமா சங்கம் இணைந்து நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவை நடத்தினர். பஸ்ஸ்டாண்ட் முன்பு நடந்த இவ்விழாவிற்கு அரிமா சங்க தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். பட்டய தலைவர் அனிதா பால்ராஜ் வரவேற்றார். நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீமான் கலந்து கொண்டு சாலை விதிமுறைகள் குறித்து பேசினார். வாகனஓட்டிகள் சாலைகளில் செல்போன் பேசி செல்லகூடாது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும், இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், கார்களில் சீட் பெல்ட் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும், நகர எல்கையில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், நான்கு வழிச்சாலை வளைவுகளில் முந்துதல் கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து போக்குவரத்து போலீசார், அரிமா சங்கத்தினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்களையும் ஒட்டினர். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க பொருளாளர் விஜயபாண்டி, இணை செயலாளர் பழனிமுருகன் மற்றும் போக்குவரத்து போலீசார் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.