திருப்புவனம், ஆக. 9: திருப்புவனம் அருகே காரில் சென்ற தம்பதியிடம், வாளை காட்டி மிரட்டி திருடப்பட்ட கார் மீட்கப்பட்டது. மதுரை, கலை நகரை சேர்ந்த தம்பதி கவுசிக், ராஜேஸ்வரி. இவர்கள் கடந்த 5ம் தேதி இரவு தங்களின் ஸ்போர்ட்ஸ் காரில் திருப்பாச்சேத்தி வரை நான்கு வழிச்சாலையில் சென்றனர். பின்னர் மதுரைக்கு திரும்பி வரும் வழியில், மணலூர் உயர் மட்ட பாலத்தின் இறக்கத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கியபோது டூவீலரில் வந்த 3 பேர், நீண்ட வாளை எடுத்து வெட்டி விடுவதாக மிரட்டி உள்ளனர். உடனே ராஜேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் செயினை கழற்றி கொடுத்துள்ளார்.
பின்னர் கவுசிக்கிடமிருந்து கார், செல்போனை பறித்துக் கொண்ட அந்த மர்ம கும்பல் மதுரை நோக்கி சென்றது. இதனையடுத்து கவுசிக் கொடுத்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அந்த கார் நேற்று முன் தினம் மதுரை அலங்காநல்லூர் சாலையில் பொதும்பு கிராமத்தில் ஒதுக்குப் புறமாக நின்றுக்கொண்டிருந்தது. அதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, திருப்புவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்புவனம் போலீசார் காரினை எடுத்து வந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்து விசாரித்து வருகின்றனர்.