திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு பள்ளிகளின் வாகனங்களை ஒருங்கிணைத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி வாகனங்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி வாகனங்களில் நீங்கள் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்போது பொறுமையாக குறைந்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இயங்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்யும் போது வாகனங்களின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்றும் வாகனத்தில் முதலுதவி பெட்டி வைக்கப்பட்டிருக்கிறதா, ஆயில், பிரேக், டயர், ஓட்டுநர் சீட்டு ஆகியவை சரியாக உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனத்தை ஓட்டிப் பார்த்தார். மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். போடாதவர்கள் வருகின்ற 10ம் தேதி(இன்று) நடைபெற இருக்கும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். மேலும் தீயணைப்பு துறை காவலர்கள் மூலம் தனி நபர்கள் அவரவர்களாகவே எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்கிற செய்முறை காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வு முகாமில் சார் ஆட்சியர் லட்சுமி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், தீயணைப்பு நிலைய ஆய்வாளர் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர்….