திருச்செந்தூர், ஜன.3: வீரபாண்டியன்பட்டணம், தாமஸ் பர்னாந்து மகன் ரதேஷ் பர்னாந்து (49). அங்குள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 31ம் தேதி காலை திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடியை நோக்கி அதிவேகமாக வந்த கார் ரோட்டில் தாறுமாறாக ஓடி அங்கு நின்று கொண்டிருந்த கார் மீதும், ரதேஷ் பர்னாந்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் ரதேஷ் பர்னாந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரதேஷ் பர்னாந்து நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் சிவகாசி, முனீஸ்வரன் காலனியை சேர்ந்த பாலமுருகன் மகன் ரத்னவேல் (33) என்பவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி கார் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே கார் மோதிய விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் பலி
previous post