திருச்சி, ஆக.2: திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட புதிய காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். திருச்சி சிந்தாமணி பகுதியில் ரூ.3 கோடியே 5 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் தரைதளத்துடன் கூடிய 5 தளங்களுடன் காவல் நிலையம் கட்டப்பட்டது. இதன் முதல் தளத்தில் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையம், இரண்டாம் தளத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம், 3வது தளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம், 4வது தளத்தில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் காவல் துணை ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளன. இதேபோல் பீமநகரில் ரூ.2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டது. இதன் முதல் தளத்தில் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையம், 2வது தளத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம், 3வது தளத்தில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இயங்கவுள்ளது.
மேலும் உறையூர் பகுதியில் ரூ.3 கோடியே 1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் காவலர்கள் முதல் தலைமை காவலர்களுக்காக 4 தளங்களுடன் 24 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்தநிலையில் சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு கட்டிடத்தை நேற்று காலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொது மக்கள் கூறுகையில், சிந்தாமணி, பீமநகரில் காவல் நிலையங்கள் கட்டி திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் முதல்வர் இந்த காவல் நிலையங்களை திறந்து வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.