Saturday, October 5, 2024
Home » திருச்சியில் அடுத்தடுத்து ரூ.2 கோடி சிக்கிய விவகாரம் 2 அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சரை காப்பாற்ற முயற்சி? மவுனம் காக்கும் தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை

திருச்சியில் அடுத்தடுத்து ரூ.2 கோடி சிக்கிய விவகாரம் 2 அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சரை காப்பாற்ற முயற்சி? மவுனம் காக்கும் தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை

by kannappan

திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 23ம் தேதி இரவு 8 மணியளவில், திருச்சி பெட்டவாய்த்தலையில் அதிமுக கொடி கட்டி எம்எல்ஏ பாசுடன் வந்த காரில் இருந்த சாக்கு மூட்டையில் ரூ.1 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.பின்னர், காரில் வந்த முசிறியை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன்(55), 11வது கிளை செயலாளர் சத்தியராஜா (43), எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயசீலன்(46), டிரைவர் சிவக்குமார்(36) ஆகியோரிடம் விசாரித்தனர். அதில், முசிறி அதிமுக எம்எல்ஏ செல்வராசு மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்றும், பணப்பட்டுவாடாவுக்கு அதிமுக மூத்த எம்பி மூலம் திருச்சி அமைச்சர், மாவட்ட செயலாளர் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது. பிடிபட்ட 4 பேரும் இந்த பணத்திற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி கடிதம் கொடுத்து விட்டு சென்றனர்.இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த நிஷாந்த்கிருஷ்ணா, மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருந்த கலெக்டர் சிவராசுக்கு தகவல் கொடுத்து அறிக்கை அனுப்பினார். அதில், ரூ.1 கோடி, அதிமுக எம்எல்ஏ காரில் இருந்துதான் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கலெக்டர் சிவராசு இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கவில்லை. மறுநாள் தேர்தல் பார்வையாளர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்து இருந்தார். அதில், ‘‘ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா, அதிமுக எம்எல்ஏ காரில் இருந்துதான் ரூ.1 கோடி எடுக்கப்பட்டது என அறிக்கை கொடுத்துள்ளார். ஆனால், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரும், எஸ்.பி.யும் ஆளும்கட்சியினரின் அழுத்ததால் மூடி மறைக்க திட்டமிட்டுள்ளனர்’’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, கலெக்டர் சிவராசு, எஸ்.பி. ராஜன், ஸ்ரீரங்கம் சப்.கலெக்டர் நிஷாந்த்கிருஷ்ணா ஆகியோரை 25ம் தேதி இரவு தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது.அதிகாரிகள் உண்மை தகவலை மறைத்து, அறிக்கையை மாற்றி கொடுத்தது அம்பலமாகியும், அதிமுக எம்எல்ஏ செல்வராசு மற்றும் அவரது மகன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்திலேயே உண்மை வெளிச்சத்திற்கு வராத நிலையில், மணப்பாறை அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் டிரைவர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் ரூ.1 கோடி சிக்கி உள்ளது. திருச்சியை பொறுத்தவரை எம்.பி.க்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் மூலம் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்து 2 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்புடைய இடத்தில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக, கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள், சந்தேகப்படும் நபர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் 2அதிமுக எம்எல்ஏக்களின் பெயர் வராமல் காப்பாற்றுவதிலேயே தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் குறியாக இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்….

You may also like

Leave a Comment

fourteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi