திருக்கனூர், பிப். 5: திருக்கனூரில் சிறுமிக்கு கத்தி முனையில் தாலி கட்ட முயன்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி திருக்கனூர் அருகே தமிழகப் பகுதியான பொன்னம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). திருக்கனூர் மெயின் ரோட்டில் உள்ள பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், அங்குள்ள ஒரு கடையில் பணிபுரியும் 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியுள்ளார். அந்த பெண், திருமணத்துக்கு மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்தப் பெண், திருக்கனூர் கடைவீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து சென்ற ரமேஷ், அந்த பெண் வீட்டிற்குள் சென்றதும் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் உடன்படவில்லை. கத்தி காட்டி மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து கட்ட முயன்றுள்ளார். இதனை கண்டு திடுக்கிட்ட அந்த பெண் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பெண்ணை மீட்டு, திருக்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து வந்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து ரமேஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.