திண்டுக்கல், செப். 20: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் கிறிஸ்டியன் கீலர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் இளமதி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி வாழ்த்தி பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, காலணி உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தொலை தூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்தில் வர வேண்டும் என்பதற்காக இலவச சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதில் ஏற்பட்ட சிரமத்தை அறிந்த முதல்வர் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இவ்வாறு பேசினார் இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் மரிய லூயிஸ் சேகர், தமிழாசிரியர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.