திண்டுக்கல் : அகரம் பேரூராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் புதர்மண்டி உள்ள கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அகரத்தில் இருந்து உலகம்பட்டி செல்லும் வழியில் தனியாருக்குச் சொந்தமான கிணறு உள்ளது. மேலும் உலகம் பட்டியிலிருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏராளமான கார் மற்றும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையைதான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கிணற்று பகுதியில் கால்நடைகள் அதிகமாக மேய்ச்சலுக்கு வருகின்றன. இங்குள்ள கிணற்றுக்கு தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் அடிக்கடி கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. அந்தப் பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் உயிரை கையில் பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரிய விபரீதம் நடக்கும் முன் கிணற்றின் அருகே பாதுகாப்பு சுவர் அமைத்து, கிணற்றில் பாதுகாப்பு வளையம் அமைத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….