வந்தவாசி, பிப்.5: வந்தவாசி அருகே நடுரோட்டில் அரிவாள்மனையை சாணம் தீட்டியபடி பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் துரை என்பவரது மகன் சம்பத்(27). இவர் தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை மாலையிட்டான் குப்பம் கூட்டுச்சாலை அருகே வீட்டில் இருந்த அரிவாள்மனையை கொண்டு வந்த சம்பத், திடீரென நடுரோட்டில் சாணம் தீட்டியபடி பொதுமக்களை பார்த்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து, ஆபாசமாக பேசி உள்ளார்.
அப்போது அப்பகுதியில் போக்குவரத்து பாதித்து வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சம்பத் தப்பி ஓடி தலைமறைவானார். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் வீட்டின் அருகே பதுங்கி இருந்த சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.