Sunday, September 29, 2024
Home » ‘தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன், என்னை தேடவேண்டாம்’ என கடிதம் எழுதிவைத்துவிட்டு மேம்பாலத்திலிருந்து பாலாற்றில் குதித்த மூதாட்டி

‘தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன், என்னை தேடவேண்டாம்’ என கடிதம் எழுதிவைத்துவிட்டு மேம்பாலத்திலிருந்து பாலாற்றில் குதித்த மூதாட்டி

by kannappan

வேலூர் : தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு காட்பாடி விருதம்பட்டில் மேம்பாலத்திலிருந்து பாலாற்றில் குதித்த மூதாட்டி  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இரவு முழுவதும் நடுஆற்றில் சிக்கி இருந்தவரை பொதுமக்கள் மீட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(72). இவரது மகன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதால் ேவலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி அல்சர் காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மூதாட்டி அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் மாலையில் வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி, தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், யாரும் தன்னை தேட வேண்டாம் என்று கூறி வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு வெளியேறி உள்ளார். பஸ் மூலம் வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து புதிய மேம்பாலம் வழியாக விருதம்பட்டுக்கு நடந்து சென்றுள்ளார். தொடர்ந்து வேலூரை நோக்கி விருதம்பட்டு பழைய பாலாற்று மேம்பாலம் வழியாக நடந்து சென்று வந்துள்ளார். இரவு 7 மணியளவில் திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே பாலாற்றில் மூதாட்டி குதித்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக வேலூர் வடக்கு போலீசாருக்கும், விருதம்பட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரு காவல்நிலைய போலீசார் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாலாற்றில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியை தொடங்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை காங்கேயநல்லூர் பாலாற்றிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ரஜேஷ் மற்றும் சிவக்குமார் வந்துள்ளனர். அப்போது, நடுஆற்றில் ஒரு மூதாட்டி சிறிய மரத்தை பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் தத்தளித்தபடி இருந்துள்ளார். உடனே அவர்கள் அருகில் சென்றதும் மூதாட்டி தன்னை காப்பற்றும் படி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மூதாட்டியை இருவரும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில் பாலாற்றில் இருந்து குதித்ததும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வெளியே வர முடியாமல் ஒரு சிறு மரத்தை பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லேசான காயங்களுடன் இருந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள அரசு பெண்ட்லனட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலாற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மூதாட்டி ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் சிறிய மரத்தை பிடித்துக் கொண்டு இரவு முதல் நேற்று காலை 9 மணி வரை விடிய விடிய இருந்து உயிர்பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi