சென்னை: தமிழகம் முழுவதும் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடந்த ஒரு வாரமாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது தொடரப்பட்ட வழக்கை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாஜி அமைச்சரும் சிக்குவார் என்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்தாலும் ஊழல் மலிந்து இருந்தது. தலைமைச் செயலகம் பக்கம் யாராவது சென்றால் கூட, பணம் வாங்கிக் கொண்டு, எதையாவது முடித்து தருகிறேன் என்று கூறும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பணி மாறுதல் முதல், பணி நியமனம் வரை எல்லாமே பணம்தான் தீர்மானித்தது. ஒரு பைல் ஒரு டேபிளில் இருந்து மற்றொரு டேபிளுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணி மாறுதலுக்கு பணம் வாங்க தடை விதிக்கப்பட்டது. நேர்மையான, வேகமான நிர்வாகம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால், துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி அதிகாரிகளை முடுக்கி விட்டு வருகிறார். ஒரு சிறிய புகார் வந்தால் கூட அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேநேரத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் வந்தால், அந்தப் புகார் மீது மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.அதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்களிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி வேலைவாய்ப்பு மோசடி குறித்து புகார்களை சேகரித்து, அரசு வக்கீல்களின் கருத்துகள் பெறப்பட்டன. தொடர்ந்து, தீபாவளிக்கு முதல் நாள் 3ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், சென்னையில் மட்டும் 12 பேர் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். அதில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் 3வது மனைவி எலிசபெத்தும் கைது செய்யப்பட்டார். இவர், ஒன்றரை கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். அதேபோல, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் தஞ்சையில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தமிழகம் முழுவதும் 30 பேர் கைது செய்யப்பட்டனர். 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், திருவள்ளூரில் மட்டும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம், ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சம், அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி என பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் அளித்துள்ள புகாரில், முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் பொன்னேரியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரிடம் கால்நடைத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் கொடுத்ததாகவும், வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருவதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டபோது ரூ.2 லட்சத்தை கொடுத்ததாகவும், மீதி பணத்தை அப்போது அமைச்சராக இருந்தவரிடமே கொடுத்து விட்டதாக கூறி ஏமாற்றி வருவதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் தேவேந்திரன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சீரியசான புகார் என்பதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து வழக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சில விஐபிக்கள் சிக்குவார்கள் என்ற கூறப்படுகிறது. மாஜி அமைச்சர்களும் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.* வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம்: திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தகவல்திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு வேலையில் சேர்வது என்பது படித்து முடித்த பெரும்பாலான இளைஞர்களின் தலையாய குறிக்கோளாக உள்ளது. அதற்காக பல இளைஞர்கள் பல வருட காலங்கள் இரவு பகலாக படித்து தமது விருப்புவெறுப்புகளை தவிர்த்து முறையான வழியில் அரசு வேலை பெற முயன்று வரும் அதேவேளையில் சில இளைஞர்கள் தாமாகவோ அல்லது அவர்கள் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரிலோ குறுக்கு வழியில் அரசு வேலை பெற முயல்கின்றனர். அவர்களின் அந்த அரசு வேலை மோகத்தை சில மோசடி பேர்வழிகள் தனது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டு அவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிற சமூக வலைதளங்கள் வாயிலாக இனம் கண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது தற்போது சமூகத்தில் அதிகமாக காணப்படுகிறது.இவ்வாறு குறுக்கு வழியில் அரசு வேலை பெற பணம் கொடுத்து ஏமாந்த பலர் சமூகத்தில் தமது கவுரவத்தை எண்ணி புகார் கொடுக்க முன்வருவதில்லை. தயக்கம்காட்டுகின்றனர். இவ்வாறான மோசடி பேர்வழியை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிடில் மேலும் பல நபர்களிடம் மோசடி செய்து பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுவார்கள். எனவே அரசு வேலை வாங்கித் தருவதாக உலாவரும் மோசடி பேர்வழிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கடந்த 2ம் தேதி முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் Operation Jop Scam Clean Up என்னும் சிறப்பு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவ்வாறான பேர்வழிகளிடம் ஏமாற்றப்பட்டவர்கள் அதுபற்றி உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்கலாம். அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து மோசடி செய்தவர்களை கைது செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரணம் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நேரடியாக வந்து புகார் அளிக்க இயலாத நபர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக தொலைபேசி எண் 63799 04848ஐ தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம். இளைஞர்கள் தங்களது சீரிய முயற்சியினாலும், கடும் உழைப்பின் மூலமாகவும் தகுதி திறமையின் அடிப்படையில் முறையான வழியில் அரசு வேலைகளை பெற வேண்டும். அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம். பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளைத் தவறான வழியில் வழி நடத்த வேண்டாம்.இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் அறிவுறுத்தியுள்ளார்….