சென்னை: தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தடுப்பூசி வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே அப்பல்லோ, சிம்ஸ் மாதிரியான ஒரு சில தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதாரநிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 14 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சென்னையில் அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்ளிட்ட 34-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சியிலும் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தடுப்பூசி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது….