சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி (3.1 முதல் 4.6 கி.மீ உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடக கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை (1 கி.மீ உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டின் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் பதிவாகக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 8 மற்றும் 9ம் தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில்) தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 8 மற்றும் 9ம் தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில்) கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தென்மேற்கு பருவமழை நேற்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …