டெல்லி: தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பெரும் நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நாடளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் வில்சன், பல்வேறு வகைகளின் கீழ் தமிழக அரசுக்கு ரூ.19,053 கோடி அளவுக்கு ஒன்றிய அரசு பெரும் தொகையை நிலுவையில் வைத்திருப்பதாக குறிப்பிட்டார். இது தமிழக அரசின் செயல்பாட்டையும், மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய வளர்ச்சி நடவடிக்கைகளையும் பாதிக்கிறது என்றும் வில்சன் கூறினார். எந்தெந்த வகைகளில் தமிழ்நாட்டிற்கு தரப்படவேண்டிய தொகையை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது என்பதையும் வில்சன் பட்டியலிட்டார். அதில், 2018 – 19 முதல் 2021- 22 வரையிலான காலகட்டத்தில் சி.எம். அரிசி திட்ட மானியம் ரூ.5,903.48 கோடி வழங்கப்படவில்லை. சர்க்கரை மானியமாக வழங்க வேண்டிய ரூ.31.02 கோடி ரூபாயை தரவில்லை. அரிசி வலுவூட்டல் திட்டத்திற்கு தர வேண்டிய மானியம் ரூ.7.30 கோடி நிலுவையில் உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பொது விநியோக திட்டத்தில் ரூ.251.04 கோடி தரப்படவில்லை. என்.எஃப்.எஸ்.ஏ. எனப்படும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கான மானியம் ரூ.621.16 கோடி தரப்பட வேண்டும். எனவே, மொத்தமாக ரூ.6,814 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். 2020 முதல் 2022 ஜூன் மாதம் வரை ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மட்டும் தமிழகத்திற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் 10,879 ரூபாய் நிலுவை வைத்திருப்பதாக கூறிய திமுக எம்.பி. வில்சன், இந்த பெரும் தொகையினை உடனடியாக தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னதாக அருணாச்சலில் இந்தியா – சீன ராணுவ வீரர்களின் மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவை நடவடிக்கைகளையும் புறக்கணித்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர். …