காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல, நேற்று பள்ளிக்கு வந்த மாணவன் மாலை 4 மணி அளவில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கை, கால், தலையில் காயம் மற்றும் மூக்கில் தொடர்ந்து ரத்தம் வெளியேறிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு வந்த காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் ஆசிரியர் மாணவனை கண்டித்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் காஞ்சிபுரம் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். …