* 53 பைக், இரும்பு பொருட்கள் அதிரடி பறிமுதல்* புதுச்சத்திரம் அருகே தொடரும் பரபரப்புபுவனகிரி: கடலூர் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் தனியார் கம்பெனி ஒன்று தற்போது இயங்கவில்லை. ேமலும் சுற்றுச்சுவர் முழுமையாக இல்லாததாலும், குறைந்த அளவிலான காவலாளிகள் மட்டுமே பணியில் உள்ளதாலும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் அடிக்கடி கம்பெனிக்குள் புகுந்து இரும்பு பொருட்களை திருடிச் சென்று வருகின்றனர். குறைந்த அளவே காவலாளிகள் உள்ளதால் அவர்களால் திருட்டு கும்பலை தடுக்க முடியவில்லை. பிடிக்க முயன்றாலும் பைக்குகளில் தப்பியோடி விடுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பெனிக்குள் காவலாளி சுவாமிநாதன் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கம்பெனிக்குள் 25 பைக்குகளில் வந்தவர்கள் அங்கிருந்த இரும்பு பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். இதையறிந்ததும் சுவாமிநாதன் சக காவலாளிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது, 25 பேரும் தங்கள் பைக்குகளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் சுவாமிநாதன் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார், 25 பைக்குகளையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்றும் திருட்டு சம்பவம் நடந்தது. நேற்று பகல் நேரத்திலேயே சுமார் 28 பேர் கொண்ட கும்பல் கம்பெனிக்குள் இரும்பு பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். இந்த தகவலை அறிந்த கம்பெனியின் பாதுகாப்பு ஆலோசகர் கண்ணன் மற்றும் காவலாளிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இது தவிர டிரோன் கேமரா மூலமாகவும் ஒருவர் மர்ம கும்பலை படம் எடுத்துள்ளார். டிரோன் கேமரா வானில் பறந்தபடியே படம் எடுப்பதை பார்த்ததும் பயந்துபோன கும்பல் திருடிய சுமார் 350 கிலோ இரும்பையும், 28 பைக்குகளையும் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கம்பெனிக்குள் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பைக்குகளை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இரண்டு நாட்களில் மட்டும் 53 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தப்பி ஓடியவர்களை கண்காணித்த போலீசார் அங்குள்ள கிராமத்தில் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்க முயன்றபோது டிரேன் கேமரா படம் எடுத்ததை பார்த்த மர்ம கும்பல் தப்பியோடிய வீடியோ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது….