தஞ்சாவூர், ஆக. 24: தஞ்சாவூர் மாநகராட்சி 28வது வார்டில் உள்ள அழகி குளத்தில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு தண்ணீர் நிரப்பும் பணியை மேயர் சண்.ராமநாதன் மலர் தூவி துவங்கி வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சி 28வது வார்டில் கவாஸ்கர் தெருவில் உள்ள அழகி குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.44 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 50 ஆண்டுகளுக்குப்பிறகு தஞ்சாவூர் புது ஆற்றில் இருந்து 1180 அடி தூரம் வரை குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியை மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து மலர் தூவி தொடங்கி வைத்தார்.
குப்பை மேடாக பயன்பாடற்று கிடந்த அழகி குளத்தை அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை மற்றும் சிறுவர்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் மேத்தா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி நீரை வரவேற்றனர்.