சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென நேரில் சந்தித்து பேசினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முன்னாள் மேயர் கார்த்தியாயினி, முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சி சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம், கலவரம் தொடர்பாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து இந்தப் பிரச்னைகள் குறித்து மனு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. …