திருவாரூர்: தமிழகத்தில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு பல இடங்களில் கனமழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணி முதல் நேற்று அதிகாலை 3.30 மணி வரை விடிய விடிய மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால் நெல் சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் கொரடாச்சேரியை சேர்ந்த கணபதி (72) என்பவரது தொகுப்பு வீட்டின் மேற்கூரை நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் கணபதி இறந்தார். அவரது மனைவி இந்திராணி (65) படுகாயத்துடன் சிகிச்சை பெறுகிறார். இதேபோல் குடவாசல் வடவேர்-சேங்காலிபுரம் சாலையில் அங்கன்வாடி பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற அலமேலு(70), நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டின் கூரை இடிந்து விழுந்து இறந்தார். தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையில் ஒரு சில இடங்களில் சாரல் மழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது….