புதுடெல்லி: ‘புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் போலி கணக்குகளை நீக்க வேண்டும்’ என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பிரதமர், ஜனாதிபதியும் கூட பயன்படுத்துகின்றனர். இவர்களின் பெயரில் சமூக விரோதிகள் போலி கணக்குகளை தொடங்கி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பயனாளர்கள், தங்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டதாக புகார் அளித்து இருந்ததால், 24 மணி நேரத்தில் அந்த கணக்குகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள உத்தரவில், ‘புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, போலி கணக்குகள் தொடர்பாக பயனாளர்கள் அல்லது அவரது சார்பில் யாரேனும் ஒருவர் புகார் அளித்த 24 மணி நேரத்தில் அந்த போலி கணக்குகளை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஆள்மாறாட்டம் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வரும்,’ என கூறப்பட்டுள்ளது. …