சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அதில், ‘‘ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர். அவர் மூலம் சித்ராவை நன்றாக தெரியும். சித்ராவுக்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்தேன். ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் நான் மட்டுமே சாட்சியம் அளித்தேன். இதற்காக ஹேம்நாத் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். ஹேம்நாத்தால் என்னுடைய குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் சாட்சிகளை பண பலத்தால் மிரட்டி வருகிறார். எனவே, அவருக்கு தரப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….