செய்யாறு, செப். 14: செய்யாறு எல்ஐசி அலுவலகத்தில் ஜெனரேட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆற்காடு சாலையில் எம்எல்ஏ அலுவலகம் அருகில் எல்ஐசி அலுவலகம், தனியார் வங்கி, தேசிய மயமாக்கப்பட்டு வங்கி அடுத்தடுத்து உள்ளன. இந்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணி அளவில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எல்ஐசி அலுவலகத்தில் கீழ் தளத்தில் உள்ள 25 கிலோ வாட் ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. அப்போது அதில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்புத் துறை அலுவலர் (பொறுப்பு) மணி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் 10 நிமிடத்தில் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விரைந்து வந்த தீயை அணைத்த தீயணைப்புத் துறை வீரர்களின் பொதுமக்கள் பாராட்டினர்.