நன்றி குங்குமம் தோழி ‘‘சென்னை எங்களுக்கு புதுசு. இங்கு சொந்தக்காரங்க உறவினர்கள்னு எங்களுக்கு யாரும் கிடையாது. ஒரு நட்பு வட்டாரம் அமைத்துக் கொள்ளத்தான் இந்த அமைப்பில் நானும் என் கணவரும் சேர்ந்தோம். இப்போது இதன் மூலம் 25 குடும்பங்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்’’ என்கிறார் கிருத்திகா. இவர் சென்னையின் லேடீஸ் சர்க்கில் என்ற சர்வதேச அமைப்பின் தலைவராக இயங்கி வருகிறார். ‘‘ரவுண்ட்டேபிள் தான் இதன் தாய் அமைப்பு. இதனை முதன் முதலில் சென்னையில் உள்ள ஆண்கள் தான் 40 வருடத்திற்கு முன் அமைத்தார்கள். தற்போது சர்வதேச அளவில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இதன் சிஸ்டர் கன்சர்ன்தான் லேடீஸ் சர்க்கில்.இந்த அமைப்பு பெண்களுக்கானது. அதாவது ரவுண்ட்டேபிளில் இருக்கும் ஆண்களின் மனைவிகள் தான் லேடீஸ் சர்க்கில் அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியும். ஒவ்வொரு இடத்தில் இயங்கும் இந்த அமைப்பிற்கு ஒரு எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனைக் கொண்டு தான் நாங்க செயல்பட்டு வருவோம். அதாவது எங்களின் லேடீஸ் சர்க்கில் மெட்ராஸ் மிட் டவுன் 7 என்ற எண்ணில் இயங்கி வருகிறது. இதில் நாங்க 15 பெண்கள் செயல்பட்டு வருகிறோம்.இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே பாமர மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வது தான். அதாவது நாங்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் செயல்பட பலர் தனிப்பட்ட முறையில் மற்றும் நிறுவனங்களின் பெயரில் நிதியுதவி செய்து வருகிறார்கள். அதனைக் கொண்டு நாங்க ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்’’ என்ற கிருத்திகா இம்மாதம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செரிபிரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நிதி உதவியினை மேற்கொண்டுள்ளார். ‘‘லேடீஸ் சர்க்கிலின் முக்கிய அம்சம் பெண்கள் மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி, பள்ளிகளில் அடிப்படை வசதி போன்ற பல திட்டங்களை செய்து வருகிறோம். அதில் ஒன்று தான் செரிபிரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கான நிதியுதவி. இதற்கு குழந்தைகளே நிதியினை திரட்ட முன் வந்தனர். அந்த திட்டத்தில் 15 குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்கள் மெழுகுவர்த்தி, கப், சாக்லெட் போன்றவற்றை செய்து அதை ‘லிட்டில் மார்க்கெட்’ என்ற பெயரில் ஸ்டால் அமைத்து விற்பனை செய்தனர். அதில் இருந்து வந்த தொகையினை நாங்க செரிபிரல் பால்சிக்கென இயங்கி வரும் அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கினோம். இந்த லிட்டில் மார்க்கெட்டினை நாங்க 2018ம் ஆண்டு நடத்தினோம். அதன் பிறகு கொரோனா காரணத்தால் எங்களால் செய்ய முடியவில்லை. இப்போது மறுபடியும் துவங்கி இருக்கிறோம். லிட்டில் மார்க்கெட் மூலம் எங்களால் இரண்டு விஷயங்களை செய்ய முடிந்தது. ஒன்று அந்த அமைப்பிற்கு நிதி உதவியினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது. இந்த அமைப்பு செரிபிரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையினை அளிக்கிறார்கள். நோயின் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை மாறுபடும். மேலும் ஒரு குழந்தைக்கு மட்டுமே ஒரு லட்சம் வரை சிகிச்சைக்காக செலவாகும் என்பதால், அவர்கள் எங்களை அணுகி உதவிக் கேட்டார்கள். அதன் அடிப்படையில் நாங்க இந்த லிட்டில் மார்க்கெட் அமைத்து அவர்களுக்கு உதவி செய்தோம். அடுத்து லிட்டில் மார்க்கெட்டில் ஈடுபட்ட குழந்தைகள். இவர்களுக்கு இந்த வயசிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்படும். மேலும் எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்காமல், என்ன செய்யலாம் என்று அவர்களின் சிந்தனையால் இந்த லிட்டில் மார்க்கெட் அமைந்தது. தங்களின் பொருட்களை பிராண்டிங் செய்து, அதனை மார்கெட்டிங் மற்றும் விற்பனை செய்யும் யுக்தியையும் கற்றுக் கொள்வார்கள்’’ என்றவர் அமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டினை குறித்து விவரித்தார். ரவுண்ட்டேபிள் ஆண்களுக்கானது. இதில் ஆண்கள் தான் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதேபோல் லேடீஸ் சர்க்கில் ரவுண்டேபிளில் உள்ள ஆண்களின் மனைவிகளுக்கானது. அவர்கள் மட்டும்தான் இதில் உறுப்பினராக இருக்க முடியும். ஒரு கிளையில் 25 பேர் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும்.அதேபோல் 40 வயதிற்கு பிறகு உறுப்பினராக இருக்க முடியாது. ஓய்வு பெற்று விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஒருவர் என உறுப்பினருக்குள் ஒருவர் தலைவர் பதவியினை ஏற்றுக் கொள்வர். இந்த ஒரு வருடத்தில் தலைவராக இருப்பவர்கள் மற்ற உறுப்பினரோடு இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவார்கள். சில நேரங்களில் ஆண்களின் அமைப்போட இணைந்தும் செயல்படுவோம். எங்க அமைப்பு பொறுத்தவரை பின்தங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகள் கல்விக்கான உதவியினை செய்வது தான் முக்கிய நோக்கம். நாங்க பல அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் தேவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சிலர் கம்ப்யூட்டர் லேப் வேணும்னு சொல்வாங்க. ஒரு சிலர் கழிவறை அல்லது கட்டிடம் அமைத்து தரச்சொல்லி கேட்பாங்க. இது தவிர சின்ன சின்ன திட்டங்களும் செய்கிறோம். அதாவது கண் அறுவை சிகிச்சை, பிராஸ்தடிக் லிம்ப் போன்றவற்றுக்கும் நிதி திரட்டி தருகிறோம். முதலில் அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொள்வோம். அதன் பிறகு அதற்கான பட்ஜெட்டினை அமைப்போம். பின், நிதி திரட்டுவோம். இப்போது ெபரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர் ஆக்டிவிட்டி மூலம் இதுபோன்ற சமூக சேவைக்காக ஒரு நிதியினை ஒதுக்கி இருப்பார்கள். அதனை நாங்க பயன்படுத்திக் கொள்வோம். மேலும் ஒரு சிலர் தனிப்பட்ட முறையிலும் எங்களுக்கு உதவ முன் வருவார்கள். இந்த அமைப்பு சர்வதேச அளவில் செயல்பட்டு வருவதால், பலருக்கு இதன் செயல்பாடு பற்றி தெரியும் என்பதால் எங்களை நேரடியாக அணுகி உதவி கோருவார்கள். அப்படித்தான் இரண்டு மாசம் முன்பு ஈஞ்சம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் ஆண்களுக்கான டெய்லரிங் யூனிட் ஒன்றை அமைத்துக் கொடுத்தோம். இவர்களால் கால்களால் மிதித்து தையல் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது என்பதால், என் தோழியின் ஜவுளி நிறுவனத்தில் பயன்பாட்டில் இல்லாத இயந்திர தையல் மெஷினை வாங்கிக் கொடுத்தேன். இப்போது இந்த யூனிட்டில் ஆண் பெண் என 15 பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் தைக்கும் துணிப்பை, தலையணை கவர் மற்றும் நைட்டிக் கொண்டு தங்களுக்கென ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். நிறுவனங்களின் நிதியுதவி மட்டுமில்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சி மூலமாகவும் நிதி திரட்டு அதனை எங்களின் திட்ட செயல்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்கிறோம்’’ என்றவர் ஒரு அரசுப் பள்ளியினை முழுமையாக தத்தெடுத்து அதற்கான அனைத்து தேவைகளையும் செய்ய உள்ளனர்.‘‘இரண்டு ஆண்டுகள் கோவிட் என்பதால் பெரிய அளவில் நாங்க ஈடுபடவில்லை. தற்போது முழு மூச்சாக இறங்கி வேலையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது அரசு உதவி பெறும் நவபாரத் பள்ளியினை தத்தெடுத்து இருக்கிறோம். அங்கு 200 குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு கம்ப்யூட்டர் லேப், கழிவறை வசதி, ஸ்மார்ட் கிளாஸ் என அனைத்து வசதிகளும் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அந்த பள்ளியினை முழுமையாக அமைக்க எங்களின் பட்ஜெட் 5 லட்சம். அந்த நிதியினை திரட்ட இப்போது ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும் ஒரு திட்டத்தினை ஆரம்பித்துவிட்டால், அதனை முடிக்காமல் அடுத்த திட்டத்திற்குள் செல்ல மாட்டோம். அப்படிப்பட்ட ஒரு புரிதல் எங்கள் அமைப்பில் உள்ள அனைத்து பெண்களிடமும் உள்ளது’’ என்றார் கிருத்திகா.தொகுப்பு: ஷம்ரிதிபடங்கள்: ஜி.சிவக்குமார்…
செரிபிரல் பால்சி குழந்தைகளின் லிட்டில் மார்க்கெட்!
previous post